ஆட்சியை தீர்மானிக்கும் பலம் வாய்ந்த சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் திகழும்: மு.கா. வேட்பாளர்
எதிர்வரும் செப்டெம்பர் மாதம 08ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் 12ஆசனங்களைப் பெற்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை தீருர்மானிக்கின்ற பலம்வாய்ந்த சக்தியாக திகழும் என்று ஸ்ரீ லங்கா முஜ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகின்ற மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் அல் ஹாபிஸ் நஸீர் அஹமட் கூறினார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் கிழக்கு மாகாண சபைக்காக போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கிழக்கு மாகாணத்தில் நடைபெறுகின்ற இத் தேர்தலில் களமிறங்கியுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் 06 ஆசனங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 ஆசனங்களையும் பெற்று கிழக்கு மகாகாண சபையில் ஆட்சியை தீர்மானிக்கின்ற கட்சியாக இருக்கப் போகின்றது.
இத் தேர்தலின் போது எந்தவிதமான தில்லுமுள்ளு செயற்பாடுகளும் இடம்பெறாதவாறு தேர்தல் ஆணையாளர் பல திட்டங்களை வகுத்து மிகவும் கவனமாக இத் தேர்தலை நடத்தவுள்ளதால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல்ல பஷீல் ராஜபக்ஷ அல்ல கோத்தபாய ராஜபக்ஷ அல்ல சம்பிக்க ரணவக்க அல்ல எவராலும் இத் தேர்தலில் எந்தவித தில்லுமுள்ளுகளையும் நடத்த முடியாது.
இந்நாட்டில் மூன்று மாகாணங்களில் தேர்தல்கள் நடைபெறுகின்ற போதிலும் கிழக்குமாகாணத்தில் நடைபெறுகின்ற கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலை உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் அவதானிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
யுத்தம் நடைபெற்ற காலப்பகுதகிளில் பல உயிர்கள் கொன்று குவிக்கப்பட்ட நிலையில் இந் நாட்டின் ஜனாதிபதி அவர்கள் ஜனநாயகத்தை ஏற்படுத்தப் போகின்றாரா இல்லையா என்பதை சர்வதேச சமூகம் கவனம் செலுத்தி வருகின்றது. இவ்வாறு நாட்டில் ஜனநாயகம் ஏற்படுத்தப்படா விட்டால் இவர்களின் கழுத்தில் சர்வதேச சமூகம் தூக்குக்கயிற்றை இட கச்சை கட்டிக் கொண்டு நிற்கின்றது.
இதனால் கிழக்கு மாகாணத்தில் நடைபெறப் போகின்ற இத் தேர்தலை சர்வதேச சமூகம் மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருப்பதால் இந்த அரசாங்கத்தினால் இத் தேர்தலில் எந்த தில்லு முல்லுகளையும் செய்ய முடியாது. இதனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் 12 ஆசனங்களை பெறுகின்ற வாய்ப்புக்களைப் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியினர் பறந்தாலும் 3 ஆசனங்களக்கு மேல் பெற முடியாது. கடந்த மாகாண சபைத் தேர்தல் காலத்தில் மதலமைச்சர் கோஷத்தினை முன் வைத்து பொய்ப் பிரசாரத்தினை சகோதரர் ஹிஸ்புல்லாஹ் மேற்கொண்டு முஸ்லிம் மக்களிடத்தில் இருந்து பெற்ற வாக்குகள் 37ஆயிரம் ஆகும்.
இப்போது காத்தான்குடியில் அடையாளம் தெரியாத சிப்லி என்பவரை வேட்பாளராக ஹிஸ்புல்லாஹ் களமிறக்கியுள்ளதால் காத்தான்குடி மக்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கவுள்ளனர். -வீரகேசரி-


